ஸ்டாலின் மீது போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்
திருமங்கலம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாக்காளர்களுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணம், வேட்டி, சேலை உள்ளிட்டவற்றைக் கொடுத்ததாக அதிமுக புகார் கூறியது.
இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அது வெளியிட்டது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரி ராமச்சந்திரனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று திருமங்கலம் டி.எஸ்.பி. ஷாஜகானிடம், தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் ஸ்டாலின் மீது புகார் மனுவை அளித்தார்.
இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் மூலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் வழங்கினார்.
அதேபோல, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
அதன் பேரில் அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.