சென்னையில் தொடங்கியது வெளிநாட்டு இந்தியர் மாநாடு -பலத்த பாதுகாப்பு
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 7வது வெளிநாட்டு இந்தியர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். சுரினாம் துணை அதிபர் ராம் தேவ், மொரீஷியஸ் துணை அதிபர் மொரீஷியஸ் நாட்டு துணை அதிபர் அங்கிடி வீரய்யா செட்டியார், முதல்வர் கருணாநிதி, வெளிநாடு இந்தியர் வாழ் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
9ம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிறைவுரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில், மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டுக்கு டெக்கன் முஜாகிதீன்' என்ற அமைப்பின் பெயரில் இ-மெயில் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாகவே மாநாடு நடக்கும் பகுதி, போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது.
இந் நிலையில் எழும்பூரில் உள்ள ஏர்-இந்தியா விமான நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் வந்த ஒரு கடிதத்தில்,
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஜமாத் உத் தாவா ஆகிய அமைப்புகள் 10 மனித வெடிகுண்டுகளை சென்னைக்கு அனுப்பியுள்ளாகவும், அவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி செல்லும் பாதையில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவார்கள் என்றும்,
அவர்கள் ஏ.கே. 47 துப்பாக்கிகள் உட்பட நவீன ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்றும், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் அருகே தாக்குதலை எதிர்நோக்கி அவர்கள் காத்திருப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னையில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.