பெட்ரோல் வினியோகப் பணியில் ராணுவம்?
டெல்லி: பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகளின் ஸ்டிரைக்கால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீரமைக்க ராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த புதன்கிழமை முதல் பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. சுத்திகரிப்பு ஆலைகளிலும் பணிகள் முடங்கியுள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய்கள் வழியாக எரிவாயுவை அனுப்புவதை நிறுத்தி விட்டது.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து நேற்று பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா பேச்சு நடத்தினார். நள்ளிரவு வரை நீடித்த இந்தப் பேச்சுவாரத்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை, முரளி தியோரா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். மீண்டும் அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச மாட்டோம் என்றார்.
ராணுவம் வருகிறது ..
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீரமைக்க ராணுவத்தை பணியில் ஈடுபடுத்த பெட்ரோலியத்துறை தீர்மானித்துள்ளதாக அத்துறைச் செயலாளர் பாண்டே தெரிவித்துள்ளார்.