முடிகிறது ஸ்டிரைக்: ஓ.என்.ஜி.சி தவிர அனைனவரும் வாபஸ்
டெல்லி: கடந்த புதன்கிழமை முதல் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முக்கிய பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்கங்கள் திரும்பப் பெற்று விட்டன. ஓ.என்.ஜி.சி. மட்டும் இன்னும் ஸ்டிரைக்கை தொடருகிறது.
கடந்த புதன்கிழமை முதல் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்கள் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தியாவே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு நிலைமை மோசமாகியது.
இதையடுத்து ராணுவத்தை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு தீர்மானித்தது. மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சரமாரியாக சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். வேலைக்கு வராதவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்திலிருந்து விலகுவதாக முதலில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவன அதிகாரிகள் அறிவித்தனர்.
மேலும், பிபிசிஎல்லின் பெட்ரோல், டீசல் சப்ளை உடனடியாக தொடங்கியது.
இதையடுத்து ஆயில் இந்தியா நிறுவனம், கெய்ல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் ஸ்டிரைக்கை விடுவதாக அறிவித்தன.
கடைசியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் சங்கம் ஸ்டிரைக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இந்தியாவின் மிகப் பெரிய எண்ணை பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ஆயி்ல் கார்ப்பரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் அலைக்கழித்து வந்த எரிபொருள் பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
அதேசமயம், எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) நிறுவன அதிகாரிகள் சங்கம் இன்னும் ஸ்டிரைக்கை நீடித்து வருகிறது.