பெட்ரோல், டீசல் படிப்படியாக சீரடைகிறது
டெல்லி: எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விற்பனை படிப்படியாக சீரடையத் தொடங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பெட்ரோல், டீசல் பஞ்சம் ஏற்பட்டு நாடே ஸ்தம்பித்தது. விமானப் போக்குவத்தும் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. சில மாநிலங்களில் எஸ்மா சட்டம் பிரயோகிக்கப்பட்டது. மேலும் எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் இரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இனியும் பேச்சு நடத்த முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதையடுத்து நேற்று இரவு படிப்படியாக ஒவ்வொரு எண்ணை நிறுவனமும் தங்களது வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டன.
இதைத் தொடர்ந்து உடனடியாக பெட்ரோல் பங்குகளுக்கு எரிபொருள் சப்ளை தொடங்கியது. இன்றைக்குள் நிலைமை சரியாகி விடும் என பெட்ரோலியத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் படிப்படியாக பெட்ரோல் பங்குகள் திறக்கப்படடு விற்பனை நடக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இன்னும் முழுமையாக நிலைமை சரியாகவில்லை.