லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிரடி கைது
டெல்லி: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தி நடத்தி வரும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகள் நேற்று டெல்லியில் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
சரக்கு லாரிகளின் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக கூறியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பல மாநிலங்களில் லாரிகளின் பெர்மிட்களை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
சங்கப் பொதுச் செயலாளர் ரமேஷ் குலாஸ்தி எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சரண் சிங் லோக்ரா, செயலாளர் வேணுகோபால், கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆசிப் அலி சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் குழுமியிருந்த இவர்களை போலீஸார் வளைத்துக் கைது செய்தனர். சில நிர்வாகிகள் ஓட முயன்றபோது அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்டிரைக்கை சட்டவிரோதம் என்று அறிவித்து லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 12ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications