Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாரி ஸ்டிரைக் தீவிரம்-பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

Lorry Strike
டெல்லி: லாரி ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து மத்திய தரை வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவை உடனடியாக டெல்லிக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தி நடத்தி சரக்கு லாரிகளின் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக கூறியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

பல மாநிலங்களில் லாரிகளின் பெர்மிட்களை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

சங்கப் பொதுச் செயலாளர் ரமேஷ் குலாஸ்தி எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சரண் சிங் லோக்ரா, செயலாளர் வேணுகோபால், கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆசிப் அலி சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் குழுமியிருந்த இவர்களை போலீஸார் வளைத்துக் கைது செய்தனர். சில நிர்வாகிகள் ஓட முயன்றபோது அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.

நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, ஸ்டிரைக்கை சட்டவிரோதம் என்று அறிவித்து லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 12ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

6வது நாளாக நீடிப்பு ..

இந்த நிலையில், 6வது நாளாக இன்றும் லாரி ஸ்டிரைக் நீடித்து வருகிறது. தங்களது கோரிக்கைகளில் சற்றும் தளர்வு காட்டாமல் தொடர்ந்து தீவிரமாக போராடப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைப் பிரிவு லாரிகளும் இன்று இரவு முதல் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலும் ஸ்டிரைக் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

தங்கள் தொழிலில் கடும் இழப்புகளை சந்தித்து வருவதாகவும், எனவே தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் துணைத் தலைவர் அம்லோக் சிங் பாட்டியா தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தங்களது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்றும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்தான் அரசுடன் பேச்சு நடத்துவோம் என்றும், அதுவரையில் போராட்டமும் தொடரும் என்றும் லாரி அதிபர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் சுமூகமாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

15 முதல் 20 லட்சம் லாரிகளை உணவுப் பொருட்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாலுவுக்கு மன்மோகன் சிங் அவசர அழைப்பு ..

இதற்கிடையே, சென்னையில் உள்ள அமைச்சர் டி.ஆர்.பாலுவை உடனடியாக டெல்லிக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துள்ளார்.

கோடிக்கணக்கில் சரக்குகள் தேக்கம் ...

லாரி ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் ஆங்காங்கே, கோடிக்கணக்கில் சரக்குகள் தேங்கியுள்ளன. காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய பண்டங்களின் விலையும் மிகவும் அதிகரித்துவிட்டது.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்சினை நிலவுகிறது.

ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில அரசுகள், அங்கு அத்தியாவசியப் பொருள்கள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) அமல்படுத்தியுள்ளன. இதன்படி, பொதுமக்களை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரை எந்த விசாரணையுமின்றி கைது செய்து 6 மாதம் வரை சிறையில் தள்ளமுடியும்.

தமிழகத்திலும் எஸ்மா ...

இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் எஸ்மா' சட்டத்தை அமல்படுத்தலாமா என்பது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி, பொதுத்துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில், ஸ்டிரைக் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டிரைக் பாதிப்பில் இருந்து பொதுமக்களை விடுவிக்க கடும் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதவிர, மேலும் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னலை இனியும் அரசு பார்த்து கொண்டிருக்காது. இதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறிகளை வெளியூரில் இருந்து பஸ் மற்றும் ரெயில்கள் மூலமாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. டீசல் சேமிப்பு நடவடிக்கையாக, கூட்டம் குறைவாக இருக்கும் ரூட்களில் இயங்கும் பஸ்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

ராணுவமும் வரவழைப்பு ...

ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் டேங்கர் லாரிகளை ராணுவத்தினர், போலீஸ் டிரைவர்களை வைத்து ஓட்டுவது; மக்கள் நலனை பாதிக்கும் வகையில், சட்டவிரோதமாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தேவைப்பட்டால், எஸ்மா சட்டத்தை, மற்ற மாநிலங்களை போல் அமல்படுத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+