காஞ்சிபுரத்தில் பரவும் வயிற்றுப் போக்கு-2 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வயிற்றுப் போக்கு பரவி வருகிறது. இதற்கு 2 பேர் பலியாகியுள்ளனர். காலரா பரவி வருவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரம், டோல்கேட், லாலா குட்டைத் தெரு, மலையாள தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
மேல்நிலை குடிநீர்த் தொட்டியிலிருந்து அசுத்த நீர் சப்ளை ஆனதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
மாசு கலந்த குடிநீரை பருகிய பலருக்கும் அடுத்தடுத்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க போதிய இடம் இல்லை. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றிலும் தங்க வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது காலரா என்று பாதிக்கப்பட்ட சிலர் கூறுகின்றனர். இருப்பினும் டாக்டர்கள் இதுவரை காலரா ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கவில்லை.
தற்போது 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ரா, பாமக எம்எல்ஏ சக்திகமலாம்பாள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்தனர். சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
முதியவர் - குழந்தை பலி
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள தெருவைச் சேர்ந்த வஜ்ரவேலு (70) என்பவரும், ஒரு வயது பெண் குழந்தையும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் உரிய சுகாதார நடவடிக்கைகள், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications