முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சோரன் முடிவு
ராஞ்சி: முதல்வர் பதவியிலிருந்து விலக முடிவு செய்து விட்டார் சிபு சோரன். ஓரிரு நாட்களில் அவர் பதவி விலகுகிறார்.
ஜார்க்கண்ட முதல்வராக உள்ள சிபு சோரன் சமீபத்தில் தமர் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் படு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் நான் விலக மாட்டேன். மறுபடியும் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி வந்தார் சோரன். இதனால் நெருக்கடி ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் டெல்லி சென்ற சோரன் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பதவியிலிருந்து விலகி விடுமாறு அவருக்கு காங்கிரஸ் தலைமை ஆலோசனை கூறியது.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், சோரன் விலக அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து சோரன் ராஞ்சி திரும்பி தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆலோசனை நடந்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சோரன், நான் நாளை (இன்று) டெல்லி சென்று மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிடம் கட்சி எடுத்துள்ள முடிவை தெரிவிக்கவுள்ளேன்.
எனது பதவியை ராஜினாமா செய்ய நான் ஒத்துக் கொண்டு விட்டேன்.
அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்ல மாட்டேன். லாலு பிரசாத் யாதவ் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து மற்ற விவரங்களைக் கூறுவேன்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கும். எதிர் வரும் தேர்தல்களையும் நாங்கள் இணைந்தே சந்திப்போம். எனது தோல்வியை நான் ஒத்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.
உடன் இருந்த துணை முதல்வர் சுதிர் மஹதோ கூறுகையில், தற்போதைய அரசியல் குழப்பத்திற்குத் தீர்வு காணும் பொறுப்பை குருஜியிடம் (சோரன்) விட்டு விட்டோம். அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.