லாரி ஸ்டிரைக்: நாளை பாலு தலைமையில் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம்
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளைக் கைது செய்துள்ளபோதிலும், போராட்டத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதுதொடர்பாக மத்திய அரசு எஸ்மா சட்டத்தையும் பிரயோகித்துள்ளது. இருப்பினும் லாரி உரிமையாளர்கள் தங்களது முடிவில் திடமாக உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மாநில போக்குவரத்து அமைச்சர்களின் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலரும் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது.
இதில் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் எஸ்மா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துமாறு அமைச்சர்களிடம் பாலு வேண்டுகோள் விடுப்பார் எனவும் தெரிகிறது.