திருமங்கலம் வாக்காளர்களுக்கு கள்ள நோட்டு - ரூ. 500 சிக்கியது
மதுரை: திருமங்கலம் சட்டசபைத் தொகுதியில், வாக்களிப்பதற்காக முக்கிய கட்சிகள் பணம் கொடுத்த விவகாரத்தில், தற்போது கள்ள நோட்டையும் அவர்கள் சேர்த்து கொடுத்து மக்களை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பெண் வாக்காளர் ஒருவர் வங்கியில் தாக்கல் செய்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தல்களிலேயே மிகவும் காஸ்ட்லியான தேர்தல் திருமங்கலம் தேர்தல்தான் என்று கூறும் அளவுக்கு பணம் அங்கு சரமாரியாக விளையாடியது.
வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இரு முக்கிய கட்சிகளும் சரமாரியாக பணத்தை வாரி இறைத்ததாகவும் கூறப்பட்டது. உச்சகட்டமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக மீதும் வழக்கு உள்ளது.
பணத்தோடு நிற்காத அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு வீடு தேடிச் சென்று மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், செல்போன், அல்வா பாக்கெட்கள், இனிப்புகள் உள்ளிட்டவற்றையும், ஏதோ சீர் செனத்தி கொடுப்பது போல கொடுத்து புதிய வரலாற்றையும் படைத்ததாக கூறப்பட்டது.
சாதாரணமாக ஆரத்தி எடுத்தால், 50, 100 தட்டில் போடுவதுதான் வழக்கம். ஆனால் திருமங்கலத்தில் மட்டும் சற்று வித்தியாசமாக, ஆரத்தித் தட்டில் 2000 ரூபாய், 5000 ரூபாய் என போட்டு வாக்காளர்களின் அந்தஸ்தை உயர்த்தினர்.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, வாக்காளர்களுக்கு கள்ள நோட்டையும் கலநது கொடுத்துள்ளனர் அரசியல் கட்சியினர் எனத் தெரிய வந்துள்ளது.
சனிக்கிழமை காலை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட வில்லூரைச் சேர்ந்த ராமலெட்சுமி என்ற பெண் கள்ளிக்குடியில் உள்ள வங்கியில் 500 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யப் போனார்.
அந்தப் பணத்தை வாங்கிப் பார்த்த அதிகாரிகள், அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீஸாருக்கும் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக கட்சியினர் தந்த பணம்தான் இது என்று தெரிவித்துள்ளார் ராமலட்சுமி.
எந்தக் கட்சியினர் ராமலட்சுமிக்குப் பணம் தந்தனர் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications