மேனன் இலங்கை போகிறார் - பிரணாப் பயணம் ரத்தாகுமா?
கொழும்பு: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கை போவார் என்பது உறுதியாக தெரியாத நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கை செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவை இலங்கைப் படைகள் சுற்றி வளைத்துள்ளன. முல்லைத்தீவும் வீழ்ந்தால் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு கூறி வருகிறது.
ஆனால் இலங்கைப் படையினரின் தாக்குதலில் சிக்கி அப்பாவித் தமிழர்கள் பலர் உயிரிழந்து வருவது குறித்து தமிழக கட்சிகள் கவலை தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கண்டிப்பாக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவோம் என பிரதமர் உறுதியாக தெரிவித்துள்ள போதிலும், இப்போதைக்கு பிரணாப் போவதற்கான சாத்தியக்கூறுகளைக் காணோம்.
இந்த நிலையில் வெளியுறவுச் செயலாளர் மேனன் இலங்கை போகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் மேனன் இலங்கை செல்வார் எனத் தெரிகிறது. இலங்கை நிலவரம் குறித்து அவர் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேனனுடன், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங்கும் உடன் செல்வார் எனத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு, இந்தியா பல வகைகளிலும் உதவி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் ரா உளவுப் படை, பிரபாகரனின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கைக்கு உதவி வருவதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தப் பின்னணியில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளருடன், மேனன் இலங்கை செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications