சென்னை பாம்குரோவ் ஹோட்டலுக்கு குண்டு மிரட்டல்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் ஹோட்டலுக்கு பணம் கேட்டு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பாம்குரோவ் ஹோட்டல் உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது.
அதில், நான் நல்லவன். எனக்கு ரூ. 75 லட்சம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் ஹோட்டலை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து விடுவேன் என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹோட்டலில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
பாம்குரோவ் ஹோட்டல் உரிமையாளர் பெங்களூரைச் சேர்ந்தவர். அங்கும் கிளை உள்ளது. அந்த ஹோட்டலிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் குண்டு எதுவும் சிக்கவில்லை.
மும்பையிலிருந்து மிரட்டல் மெயில் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஹோட்டல் நிர்வாகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் உள்ளது. இந்த மோதல் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழியர் சங்கத் தலைவர், ஹோட்டல் நிர்வாகியை படுகொலை செய்த சம்பவம் நினைவிருக்கலாம்.