சென்னையில் சிங்கள பிட்சுக்கள்-வக்கீல்கள் மோதல்
சென்னை: சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிட்சுக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிட்சுக்கள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம்.
இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் நேற்று புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர்.
அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிட்சுக்களைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் பார் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த புத்த பி்ட்சுக்கள், வக்கீல்களுடன் வாதம் புரிந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது புத்த பிட்சுக்கள், வக்கீல்களை தாக்கியுள்ளனர்.
பதிலுக்கு லஷ்மன் என்கிற பிட்சுவை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.
பின்னர் இரு தரப்பும் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வக்கீல் காமராஜ் மற்றும் பிட்சுக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காமராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிட்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் பரிசீலித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications