சத்யம்-ராம் மைனாம்பதியும் கைதாகிறார்?
சத்யம் நிறுவனத்தி்ன் ஒரு பிரிவின் தலைவராக இருந்த மைனாம்பதி அந்த நிறுவனம் எடு்த்த முக்கிய முடிவுகளில் பெரும் பங்கு வகித்தவர்.
இந் நிலையில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் தான் செய்த குளறுபடிகளை ஒப்புக் கொண்டு பதவி விலகிய அதன் நிறுவனர் ராமலி்ங்க ராஜூ, நிர்வாகக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் ராம் மைனாம்பதிக்கு இந்த குளறுபடிகளில் தொடர்பில்லை என்று கூறியிருந்ததோடு, அவரையே இடைக்கால தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார்.
ஆனால், இதற்கு கடும் எதி்ர்ப்பு எழுந்தது. சத்யம் குளறுபடிகளுக்கு மிக முக்கிய காரணமாக மைனாம்பதி எப்படி இடைக்கால நிர்வாகியாக இருக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை அவரிடம் ஆந்திர சிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாகவும் இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
சத்யம் மறுப்பு:
ஆனால், இந்தத் தகவலை அவருக்கு நெருக்கமான சத்யம் வட்டாரங்கள் மறுத்துள்ளன. அவர் அமெரிக்காவில் கிளையண்டுகளை சந்திக்கச் சென்றிருப்பதாகவும் அவை தெரிவித்தன.
ராம் மைனாம்பதிக்கு ராமலிங்க ராஜூவைவிட 5 மடங்கு அதிகமாக, அதாவது, ஆண்டுக்கு ரூ. 3.5 கோடி ஊதியம் தரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்ககது. முறைகேடுகளை மூடி மறைக்க உதவியதற்காகவே அவருக்கு இவ்வளவு பெரிய தொகை தரப்பட்டதாகத் தெரிகிறது.
மேடாஸ் நிறுவனத்தை வாங்க சத்யம் முடிவெடுத்தில் மைனாம்பதிக்கு முக்கிய பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ராம் மைனாம்பதியை கைது செய்ய சிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளதாகவும், அவர் இந்தியா திரும்பியவுடன் கைதாவார் என்றும் ஆந்திர போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடிட்டர் நிறுவனத்தில் ரெய்ட்:
இந் நிலையில் சத்யம் நிறுவனத்தின் ஆடிட்டரான பிரைஸ்வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனத்திலும் சிஐடி போலீசார் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
முறைகேடு, ஊழலை மறைக்க இந்த நிறுவனத்துக்கு தரப்பட்டு வந்த கட்டணத்தை சத்யம் 5 மடங்கி உயர்த்தித் தந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இயக்குனர் டி.ஆர்.பிரசாத்தும் கைது?:
இதற்கிடையே சத்யம நிறுவன இயக்குனர்களில் ஒருவராக இருந்த டி.ஆர். பிரசாத்தும் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
டிசிஎஸ்சுக்கு உலக வங்கி ஆர்டர்:
இதற்கிடையே இதுவரை தனது சாப்ட்வேர்களை உருவாக்கி, நிர்வகித்து வந்த சத்யத்திடமிருந்து அதை டிசிஎஸ் நிறுவனத்திடம் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டிசிஎஸ்சுடன் உலக வங்கி ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.
விசாரணை அறிக்கை சமர்பிப்பு:
இந் நிலையில் மத்திய அரசின் கம்பெனி நிர்வாகத்துறை பதிவாளர், செபி, மாநில போலீசார் ஆகியோர் சத்யம் முறைகேடுகள் குறித்து நடத்திய விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
மத்திய கம்பெனி நிர்வாகத்துறை இணையமைச்சர் குப்தா இந்த விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.