இலங்கை தமிழருக்காக கைகோர்த்த பாஜக-நெடுமாறன்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்தி தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோரும், தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருநாவுக்கரசர் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் படும் துன்பம் சொல்லி மாளவில்லை. இது பற்றி மத்திய அரசிடம் எவ்வளவு சொல்லியும் நடவடிக்கையில்லை. பிரதமர் வாக்கு கொடுத்த பிறகும் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை. அவர் செல்வாரா என்பதும் தெரியவில்லை.
கிளிநொச்சியில் இருந்து 1.5 லட்சம் தமிழர்கள் வெளியேறி உள்ளனர். அவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணை போகிறது என்றார்.
இல.கணேசன் பேசுகையில்,
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் இருந்து வருகிறது. அங்கே வாழும் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். இது இலங்கை பிரச்சினை அல்ல. இந்திய பிரச்சினை என்றார்.
இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேசுகையில், பிரச்சனைக்கு 2 வழிகளில் தீர்வு காண முடியும். ஒன்று போரை நிறுத்தினால் அமைதி கிடைக்கும். மற்றொன்று சுடுகாட்டு போகும்படி செய்தால் அமைதி கிடைக்கும். இதில் எந்த வழியில் மத்திய அரசு எங்களுக்கு உதவ போகிறது என்று தெரியவில்லை. இது இந்திய நாட்டின் 100 கோடி மக்களின் பிரச்சினையாக கருதி விரைவில் ஒரு நல்ல முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
பழ.நெடுமாறன் பேசுகையில், பாஜக ஆட்சி காலத்தில் இலங்கையில் எந்த தமிழரும் கொல்லப்படவில்லை. அங்கு இந்தியா நாட்டு கப்பல் படை சுற்றி வரவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையை இந்திய நாட்டு கப்பல் படை காவல் காத்து கொண்டு இருக்கிறது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும் என்றார்.