சென்னையில் இன்று புகையில்லா போகி!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னையில் வழக்கத்திற்கு விரோதமாக அதிக புகை இல்லாமல் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை உள்ளிட்ட உபயோகப்படுத்திய பழைய பொருட்களை சுருட்டி வாரி மொத்தமாக வைத்து அதனை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர்.
வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக டயர்களையும் போட்டுக் கொளுத்த ஆரம்பித்ததால் சுற்றுச்சூழல் மாசு பட ஆரம்பித்தது.
இதையடுத்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என்று விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். புகையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் அவ்வப்போது விளக்கி வந்தனர்.
போகிப்பண்டிகை அன்று டயர்களை கொளுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும் எச்சரிக்கை விடுத்து வருவார்கள்
கடந்த ஆண்டு போகியின்போது சென்னை நகரமே மூடப்பட்டது போல கடும் புகை மூட்டமாக மாறியிருந்தது.
ஆனால் இன்று போகி கொண்டாடியதே தெரியாத அளவுக்கு புகை சுத்தமாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் இன்று அதிகாலையில் பனிமூட்டம் குறைவாக இருந்ததும், மக்கள் டயர்கள் உள்ளிட்டவற்றை எரிக்காமல் நல்லபடியாக போகியைக் கொண்டாடியதுமே ஆகும்.
நகரின் எந்த பகுதியிலும் புகை மூட்டம் இல்லை. புகையே இல்லாமல் போகி நல்லபடியாக முடிந்தது.
வீட்டிலிருந்த பழைய பேப்பர்கள், துணிகள் உள்ளிட்டவற்றை மட்டுமே கொளுத்தி மக்கள் கொண்டாடிய இந்த மாசில்லாத போகியால் சென்னை நகரம் திணறலிருந்து தப்பியது.