சத்யம் நிறுவனத்திற்கு உதவி நிதி கிடையாது - அரசு அறிவிப்பு
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உதவி நிதி (பெய்ல் அவுட்) கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராமலிங்கராஜுவின் மோசடித்தனத்தால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 2000 கோடி வரை மத்திய அரசு உதவி நிதி தரும் என்று பேச்சு நிலவி வருகிறது.
ஆனால் மத்திய அரசு இதை மறுத்துள்ளது. இருப்பினும் சத்யம் நிறுவன ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொழில்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், சத்யம் நிறுவனம் செய்த தவறை திருத்தவோ அல்லது ஈடு கட்டவோ (உதவி நிதி) மத்திய அரசு முயலாது. இருப்பினும் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது சத்யம் இயக்குநர்கள் குழுவின் முடிவும் கூட.
சத்யம் விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு தனது கடமையை செய்யும். சட்டத் திட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை அரசு செய்யும். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் காக்கப்படும். நாட்டின் பெயரும் இதில் அடங்கியிருப்பதால் அதுவும் காப்பாற்றப்படும்.
ஐடி துறையில், இந்தியா பெற்றுள்ள வெற்றிக்கும், நல்ல பெயருக்கும் சத்யத்தால் களங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.