சமாஜ்வாடியில் சஞ்சய் தத் - தங்கை பிரியா விமர்சனம்
மும்பை: சமாஜ்வாடி கட்சியுடன் இணைய சஞ்சய் தத் முடிவு செய்திருப்பது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று அவரது தங்கையும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் லக்னோ வேட்பாளராக நடிகர் சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒரு வேளை சட்ட சிக்கல் காரணமாக அவரால் போட்டியிட முடியவில்லை என்றால் அவரது மனைவி மான்யதா போட்டியிடுவார் எனவும் சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது.
சஞ்சய் தத் சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்ப்பது குறித்து அவரது தங்கையும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சஞ்சய் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக முடிவு செய்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் காங்கிரஸ் குடும்பம் என்பதை நாடே அறியும். இந்த நிலையில் சஞ்சயின் முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது.
ஆனால் இது எனது சகோதரின் முடிவு. இதனால் குடும்பத்திற்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.
இது சஞ்சயின் சொந்த முடிவு. மற்றவர்களுக்கு (மனைவி மான்யதா) இதில் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை.
எனது தந்தை சுனில்தத் வட மேற்கு மும்பையின் எம்.பியாக மக்கள் பணியாற்றினார். எனது தந்தையின் சேவைதான் அங்கு பெரிதாக இருந்தது. அவரது அரசியலை விட சேவையையே மக்கள் பார்த்தனர்.
மான்யதா குறித்து சொல்வதற்கு ஏதும் இல்லை. அவர் எனது அண்ணனின் மனைவி என்றார் அவர்.
பிரியா தத் இப்படிக் கூறினாலும், சஞ்சய் தத்தின் முடிவால் அவரது குடும்பத்திற்கிடையே பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.