ராமலிங்கராஜு உள்ளிட்ட மூவரின் சிறைக் காவல் நீட்டிப்பு
ஜனவரி 12ம் தேதி ராமலிங்கராஜு, ராமராஜு, சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வட்லாமணி சீனவாஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை இன்றைக்கு ஹைதராபாத் கோர்ட் தள்ளி வைத்தது.
ஜனவரி 23ம் தேதி வரை 3 பேரும் சிறைக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. மேலும், ராஜு உள்ளிட்ட மூவரையும் விசாரிக்க அனுமதி கோரி செபி தாக்கல் செய்துள்ள மனுவும் இன்றே விசாரணைக்கு வந்தது.
செபி விசாரணைக்கு அனுமதி மறுப்பு
முதலில் செபியின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
செபி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ராஜு நீதிமன்றக் காவலில்இருப்பதால் விசாரணை தாமதமாகிறது. எனவே அவரை விசாரிக்க அனுமதி தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ராமலிங்க ராஜு உள்ளிட்டோரின் சார்பில் ஆஜரான வக்கீல் பரத் குமார், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார்.
இதையடுத்து வருகிற 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் அதுவரை செபியை விசாரிக்க அனுமதிக்க முடியாது எனவும் கூறி விட்டார்.
இதையடுத்து ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது, போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிக்க கோரி காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராமலிங்க ராஜுவின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிப்பது தொடர்பாக ஜனவரி 17ம் தேதி முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து ஜனவரி 19ம் தேதி வரை ராமலிங்க ராஜுவின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது.
மேலும் 3 புதிய இயக்குநர்கள்
இதற்கிடைய சத்யம் இயந்குநர்கள் குழுவில் மேலும் 3 புதிய இயக்குநர்களை நேற்று அரசு நிர்ணயித்துள்ளது.
சிஐஐயின் நிறுவனர் தருண் தாஸ், இந்திய தணிக்கை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிஎன் மனோகரன், எல்ஐசியின் சூர்யகாந்த் பாலகிருஷ்ண மைனாக் ஆகியோர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் சத்யம் இயக்குநர் குழுவில் 6 இயக்குநர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது. மேலும் 4 இயக்குநர்களும், தலைவரும் நியமிக்கப்பட வேண்டும். புதிய இயக்குநர்கள் கூடி தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.