திருப்பி அடிக்க காத்திருக்கிறார்கள் தீவிரவாதிகள் - புஷ் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், நமது நாடு 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. ஆனால் தீவிரவாதிகளின் அபாயகரமான மிரட்டல்கள் இன்னும் தொடர்ந்தபடிதான் உள்ளன.
நம்மைத் திருப்பித் தாக்க மிகப் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் நமது எதிரிகள் (தீவிரவாதிகள்). அதில் அவர்கள் உறுதியாகவும் உள்ளனர்.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி இரவு இதே இடத்தில் இருந்துதான் நான் மிகுந்த கனத்த இதயத்துடன் உங்களிடம் பேசினேன். நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் எனது அரசு எடுத்த முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவையே.
நாம் போரை விரும்புபவர்கள் அல்ல. ஆனால் நம்மீது அது திணிக்கப்பட்டது. அதை எதிர்கொள்ள வேண்டியது நமது கடமை. அதை நாம் சந்தித்தோம். நமது பாதுகாப்பை நாம் சமரசம் செய்து கொள்ளமுடியாது.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து 3 நாட்கள் கழித்து நான் தரைமட்டமாகிப் போன வர்த்தக மையத்தின் குவியலில் நின்று அதைப் பார்த்த காட்சி எனக்கு இன்னும் மறக்கவில்லை.
அந்தத் தாக்குதல் நடந்து 7 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பெரும்பாலான அமெரிக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர். ஆனால் நான் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும், அமெரிக்காவை மிரட்டும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்த செய்திகள் எனக்கு வந்து கொண்டேதான் இருந்தன. எனது ஆட்சிக்காலத்தில் அவற்றைத் தகர்த்து, அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நான் உறுதி பூண்டு செயல்பட்டேன்.
எனது ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவை தீவிரவாதிகளிடமிருந்து காத்ததோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகளை அவர்களின் குகைக்கே சென்றும் நமது படையினர் சந்தித்தனர்.
நமக்கு ஆதரவாக வலுவான தோழமை நாடுகள் உடன் இருக்க, தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு தருவோரையும் நம்மால் வேட்டையாட முடிந்தது.
அல் கொய்தாவிடமிருந்தும், பெண்களை கல்லால் அடிக்கும் அநாகரீக தலிபான்களின் பிடியிலிருந்தும், ஆப்கானிஸ்தானை நாம் மீட்டோம்.
கொடூரமான சர்வாதிகாரியிடமிருந்து ஈராக் மீட்கப்பட்டது. அமெரிக்காவின் எதிரி நாடு என்ற போர்வையிலிருந்து வலகி ஜனநாயக அரபு நாடாக அது மாறியுள்ளது.
எனது ஆட்சிக்காலத்தில் நான் எடுத்த முடிவுகளில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைத்தையுமே தவறு என்று நான் சொல்ல மாட்டேன் என்றார் புஷ்.
இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவு
எனது பதவிக்காலத்தின்போது இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவுக்கு வழி காணப்பட்டது. இரு நாடுகளின் பாதுகாப்பு தோழமையும் உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் இதில் முக்கியமானது. இரு நாட்டு வர்த்தக, பாதுகாப்பு உறவுகளும் வலுவடைந்துள்ளன.
சீனாவுடனும் உறவை வலுப்படுத்தியுள்ளோம். ஜப்பான், தென் கொரியாவுடனான நட்பும் மேலும் வலுவடைந்துள்ளது என்றார் புஷ்.












Click it and Unblock the Notifications