அமெரிக்கா: முன்னணி வங்கிகளின் காலாண்டு நஷ்டம் ரூ. 1.21 லட்சம் கோடி!!
அமெரிக்காவின் பொருளாதாரா வீழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவு மோசமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
லேஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சியைத் தொடர்ந்து 28 முன்னணி வங்கிகள் திவால் நோட்டீஸ் கொடுத்தன அல்லது நஷ்டத்தில் மூடுவிழா கண்டன. இதனால் ஒட்டுமொத்தமாக அமெரிக்க வங்கித் துறை மீதான நம்பிக்கையையே மக்கள் இழந்துவிட்டனர். டெபாசிட்டுகள் அடியோடு குறைந்துள்ளன.
இந்த நிலையில் அங்கே இன்னமும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பவை சிட்டி குரூப், பாங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெரில் லிஞ்ச் மட்டும்தான்.
அவையும் கூட லாபத்தில் இயங்கவில்லை. என்றாலும் இத்தனை நாட்களாக தங்கள் நஷ்டக் கணக்கை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தன. ஆனால் இனி தாங்க முடியாது என்ற நிலையில் இப்போது நஷ்டக் கதைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
ஆந்த கதையின் ஆரம்பமே தலையைக் கிறுகிறுக்க வைப்பதாக உள்ளது.
இந்த வங்கிகள் கடந்த 3 மாதங்களில் மட்டும் இழந்துள்ள தொகை 25 பில்லியன் டாலர்கள் (அதாவது 1.21 லட்சம் கோடிகள்). ஒரு நாளைக்கு ரூ.280 மில்லியன் டாலர்கள் அல்லது ஒரு மணி நேரத்துக்கு 11 மில்லியன் டாலர்கள் வீதம் இந்த வங்கிகள் நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளன.