உத்தப்புரத்தில் மீண்டும் ஜாதி மோதல்-கல்வீச்சு
மதுரை: உத்தபுரத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம் வெடித்துள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே கோவில் இடம் மற்றும் சுவர் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இரு பிரிவினரும் மோதிக் கொண்டனர். வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இந் நிலையில் பொங்கலையொட்டி ஒரு பிரிவினர் வழிபாடு நடத்த மாடுகளுடன் அங்குள்ள வாசிமலையான் கோவிலுக்கு சென்றனர். இதை இன்னொரு பிரிவினர் எதிர்த்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு பிரிவினரும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உத்தப்புரம் விரைந்து இரு தரப்பினருடன் பேச்சு நடத்தி சமரசப்படுத்தினர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 110 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications