பஸ்களுக்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு
விழுப்புரம்: பேருந்துக்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு இருப்பதாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசாணம்முத்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பேருந்துகள் மீது கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனை தடுக்கும் விதமாக பேருந்திற்கு தீ வைப்போரை கண்டதும் சுட உத்தரவிட்டு இருப்பதாக விழுப்புரம் சரக டிஐஜி
தெரிவித்துள்ளார்.
குண்டர் சட்டம் பாயும்:
இதற்கிடையே பேருந்துகள் மீது கல் எரிந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் முக்கிய சாலைகளில் சென்ற அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
இதில் 15 பஸ்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கைதானவர்கள் மீது உள்ள பழைய வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து குண்டர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் மீது ரவுடி சரித்திர பதிவேடு தொடங்கப்படும். வரும் காலங்களில் அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
சமூக விரோத செயல்களில் படித்த மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு வருவது வருத்தத்துக்குரியது. இதனால் அவர்களால் அரசு பணிக்கோ, தனியார் நிறுவனத்திலோ பணிபுரிய சேர முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்று எச்சரிக்கிறேன் என்றார் பிரதீப் குமார்.