திருமங்கலத்தில் திமுகவின் கறி விருந்து தடபுடல்
மதுரை: திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து இன்று தொகுதி முழுவதும் கறி விருந்துகள் வைத்து தடபுடல் செய்தது திமுக.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொகுதி மக்களுக்கு அமைச்சர் ஸ்டாலின், திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி, லதா அதியமான் ஆகியோர் இன்று தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நன்றி தெரிவித்தனர்.
முதலில் செக்கானூரணியில் இருந்து திறந்த வேனில் பயணத்தைத் தொடங்கிய ஸ்டாலினும் அழகிரியும் புளியங்குளம், புங்கங்குளம்,
கீழ உரப்பனூர் வழியாக ஏராளமான கிராமங்களுக்குச் சென்று நன்றி தெரிவித்தனர்.
ஸ்டாலின் பேசுகையில்,
லதாஅதியமான் எம். எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் வந்துள்ளோம்.
வாக்களித்தமைக்காக நன்றி தெரிவிக்க வந்துள்ளோம். உங்களது பிரச்சினைகள், கோரிக்கைகளை ஏற்கனவே எங்களிடம் எடுத்து வைத்துள்ளீர்கள். அனைத்து பிரச்சனைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்க உறுதி எடுத்துள்ளோம் என்றார்.
கறி விருந்துகள்..:
இந் நிலையில் தொகுதி முழுவதும் திமுக சார்பில் ஆங்காங்கே கறி விருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உணவருந்தினர்.
ஒவ்வொரு கிராமத்திலும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு அழகிரியும், ஸ்டாலினும் வரும்போது அங்கு வாக்காளர்களுக்கு இந்த விருந்துக்கு அந்தந்தப் பகுதி திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து மாவட்டச் செயலாளர் பெரியசாமி, அவரது மகளும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் மீன்களை வரவழைத்து விருந்தில் பரிமாறினர்.
இந்த கறி விருந்து காரணமாக திருமங்கலம் பகுதியி்ல் நேற்று முதல் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications