திருமாவளவனை பரிசோதித்த 'டாக்டர்' ராமதாஸ்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை டாக்டர் என்ற முறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பரிசோதித்தார்.
ஸ்டெத்தாஸ்கோப் வைத்து அவரது இதயத் துடிப்பை சோதித்த அவர் பின்னர் இரத்த அழுத்ததையும் பரிசோதித்தார்.
பின்னர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் எழுச்சித் தமிழனாக, விடிவெள்ளியாக நம் முன் காட்சி தருகிறார், தம்பி திருமாவளவன். உண்ணாவிரத முடிவிற்காக அவர் மன்னிப்பு கேட்டார். தம்பி இந்த உண்ணாவிரத முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. எனவே மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை. தினம் தினம் இலங்கை தமிழர்கள் படும் வேதனை பற்றி பேசிக்கொள்ளும் நாங்கள் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தபோது, முதல்வரை சந்திக்கலாம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி சொன்னார்.
அதைத் தொடர்ந்து நாங்கள் மூன்று பேரும் முதல்வசர் கருணாநிதியை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினோம். அப்போது என்ன என்ன சொல்ல வேண்டுமோ அத்தனையும் சொன்னோம். கெஞ்சினோம். அழுத்தம் தந்தோம். அத்தனையும் கேட்ட முதல்வர் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே கூறுங்கள் என்றார்.
இந்திய பிரதமர், சோனியா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று நாங்கள் தெரிவித்தோம். அதன்பிறகுதான், தங்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தம்பி என்னிடம் சொன்னார்.
எனவே என்னை கேட்டுத்தான் திருமாவளவன் உண்ணாவிரத முடிவை எடுத்தார். அப்போது நான் அது காலவரையுடன் கூடிய உண்ணாவிரதமாக இருக்க வேண்டும். சாகும் வரை உண்ணா நிலையாக இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டேன். நாம் அவரை இழந்துவிடக்கூடாது. தற்போது அவருடைய இரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது. சர்க்கரை அளவும் குறைவாக இருக்கிறது. அது 70க்கு கீழே வந்தால் மிக மோசமான நிலைமை ஏற்படும்.
அவரை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வதற்குத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அது என்னுடைய வேண்டுகோள். ஆனால், "இன்று போய் நாளை வாருங்கள்'' என்று தம்பி கூறிவிட்டார். இன்று மாலை கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார். மத்திய அரசின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு செல்லப் போவதில்லை.
சில நாட்கள் காத்திருக்கலாம் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தமிழர்களை அவமானப்படுத்திவிட்டது.
முதல்வர் அவர்களே, இரண்டு முறை ஆட்சியை இழந்து எதற்காக பழியை சுமந்தீர்கள்? இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுதான் தமிழர்களை காப்பாற்றும். நீங்கள் அவர்களை (மத்திய அரசு) நம்பினால் பயனில்லை. இந்த நாட்டையே உலுக்கும் முடிவு ஒன்றை நீங்கள் எடுக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக நாம் அனைவரும் கூடி என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து முதல்வரிடம் தெரிவிப்போம்.
எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனை கேட்டுக் கொள்கிறோம். உங்கள் உயிர் முக்கியமானது. தமிழ் இனத்துக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 100 ஆண்டுகள் வாழ்ந்து நீங்கள் சேவை செய்ய வேண்டும். முதல்வரின் தூதராக ஆற்காடு வீராசாமி வந்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
நானும் ஒரு காரணத்திற்காக கடந்த 1991ம் ஆண்டில் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதனுடைய பாதிப்பு இப்போதும் எனக்கு உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் பேசி நல்ல முடிவுக்கு திருமாவளவன் முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications