லாரி மீது கார் மோதல்: இஸ்ரோ விஞ்ஞானி-மனைவி பலி
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் நடந்த சாலை விபத்தில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள விஞ்ஞானி மற்றும் அவரது மனைவி பலியாயினர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் இணை இயக்குநராக இருந்தவர் வாரானாசி கிருஷ்ண ராவ் (57). இவரது மனைவி சுசிலா (52). இவர்களுக்கு விசுவநாதன் (31), சீனிவாச மூர்த்தி (28) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இரண்டாவது மகன் சீனிவாசனுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவரை வழியனுப்ப நேற்று காலை கிருஷ்ண ராவ் தனது மனைவியுடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
பின்னர் சூலூரில் இருக்கும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெத்திக்குப்பம் அருகே வந்த போது டிரைவர் பாட்ஷாவின் கவனக் குறைவு காரணமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில் கிருஷ்ண ராவ் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலே பலியாயினர். டிரைவர் படுகாயம் அடைந்தார். பெற்றோரின் மரண செய்தி கேட்ட சீனிவாசன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார்.
இச்சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications