இறந்தவர்களுக்கு பதவி-அதிமுகவில் காமெடி!
சென்னை: உயிருடன் இல்லாதவர்களுக்கு கட்சிப் பதவி அளித்ததைக் கண்டித்து ஜெயலலிதா வீடு முன்பு போராட்டம் நடத்த அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி புகார் அளிக்க, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீடு முன் திரண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை முடித்து விட்டு வீடு திரும்பிய போது, ஜெயலலிதாவின் காரை அதிருப்தியாளர்கள் முற்றுகையிட முயன்றனர்.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் குமரகுருவிற்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
ஆனால் ஜெயலலிதாவின் கார் நிற்காமல் சென்று விட்டது. பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மனுவை பெற்று, அவர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.
அதிருப்தியாளர்கள் கொடுத்த மனு விவரம் இதுதான்...
விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலராக உள்ள குமரகுரு, தனக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களுக்கே பதவிகளைப் பெற்றுத் தந்துள்ளார். கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாவட்டச் செயலரின் சமூகத்தைச் சேர்ந்த 30 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இறந்தவருக்கு இணைச் செயலாளர் பதவி!:
கடந்த மாதம் 26ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக தோட்டபாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவி்டடன.
ஒன்றியச் செயலாளர் தாத்தா!:
தியாகதுருகம் ஒன்றியச் செயலராக நடக்கவே முடியாத வைத்தியலிங்கம் என்ற முதியவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கொளப்பாக்கம் நேர்காணலில் நீக்கம் செய்யப்பட்டவர். மாவட்டச் செயலாளரின் உறவினர் என்பதால் இவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
தியாகதுருகம் பேரூராட்சியில் எம்ஜிஆர் மன்றச் செயலராக சவுந்தர்ராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இறந்து ஒன்பது மாதம் ஆகிறது.
இது போல், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இறந்து போன 10 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டச் செயலர் கொடுத்த தவறான தகவல் தான் இதற்கு காரணம். எனவே, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.