'கள்' இறக்கும் பேராட்டம் வைகோ-பாஜக ஆதரவு
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 21ம் தேதி விவசாயிகள் நடத்தும் கள் இறக்கும் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு தரும் என்று அக் கட்சியி் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கள் இயக்கப் பேரமைப்பு, தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி வரும் ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தவுள்ள கள் இறக்கும் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு அளிக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தை காரணம் காட்டி வெளிநாட்டு வகை மதுவை நாடெங்கும் மக்கள் குடிப்பதை அரசாங்கமே ஊக்குவித்து வருகிறது. இதனால் ஒரு தலைமுறை வாழ்வே பாழாகிறது. இந்த நிலைப்பாடு அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இந்த நிலையில் கள் இறக்கத் தடை விதிப்பது நியாயமற்றது.
ஏனென்றால், அயல்நாட்டு மதுபான போதை அளவை கணக்கிடும்போது கள்ளில் போதை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றும் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டால் சுமார் 10 லட்சம் விவசாய தொழிலாளர்களும், தென்னை மற்றும் பனை மரங்களால் பயன் இன்றிப் பரிதவிக்கின்ற சுமார் 50 லட்சம் விவசாய குடும்பங்களும், பனை ஏறுவதையே தொழிலாகக் கொண்டுள்ள சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும் நேரடியாக பயன்பெறுவர்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஜனவரி 21ம் தேதி நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்திற்கு மதிமுக முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கிறது.
இப்போராட்டத்தை ஒடுக்க அரசு அடக்குமுறையை பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிப்பதோடு, அடக்குமுறை ஏவப்பட்டால் ஆங்காங்கே உள்ள கட்சியின் சட்டத்துறையினர் விரைந்து செயல்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாஜகவும் ஆதரவு:
அதே போல பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் அரசின் அணுகுமுறை வெறும் கண் துடைப்பாக உள்ளது. மது விற்பனை கூடங்கள் ஒரு மணி நேரம் முன்பாகவே மூடப்பட்டு விடும் என்பதும், எனவே அதற்கு முன்பாகவே வாங்கிக் கொள்ளுங்கள் என்பது வெறும் கண்துடைப்பு.
அரசின் டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் குறித்து கணக்கெடுத்தால் அதிகம் பேர் விவசாயிகளாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே விவசாயம் நசிந்து வரும் நிலையில் இந்த மதுப் பழக்கத்தால் அவர்கள் கிடைக்கும் வருமானத்தையும் இழந்து வருகிறார்கள்.
கேரள, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ஒரு தென்னை அல்லது பனை மரத்தில் கிடைக்கும் வருமானத்தை விட தமிழகத்து விவசாயிக்கு கிடைக்கும் வருமானம் 5 மடங்கு குறைவு. காரணம் அந்த மாநிலங்களில் கள் இறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே தமிழகத்திலும் விவசாயிகள் தங்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டால் தங்களுக்கும் வருமானம் கூடும் என கருதுகிறார்கள்.
தமிழக அரசு ஒருபுறம் வெளிநாட்டு மதுவகைகளை அனுமதித்து விட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதி மறுக்கும் இரட்டை நிலைப்பாடு ஒரு கேலிக்கூத்து என விவசாயிகள் குற்றம் சாட்டுவது நியாயமான குற்றச்சாட்டு என்றே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.