காஷ்மீர்: பிரிட்டன் அமைச்சர் பேச்சுக்கு இந்தியா கண்டனம்
டெல்லி: காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து விட்டால் தீவிரவாதப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கூறியிருப்பதற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டனிடம் இந்தியா கண்டனம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் மிலிபான்ட். அப்போது காஷ்மீர் பிரச்சினையை, தீவிரவாதப் பிரச்சினையுடன் தொடர்புப்படுத்தி அவர் பேசியிருந்தார். மேலும் காஷ்மீருக்கு தனித் தூதுவரை நியமிக்கவும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.
இது போதாதென்று, காஷ்மீர்ப் பிரச்சினைதான் தெற்காசியாவில் தீவிரவாதம் தலை தூக்க காரணம். காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்த்து விட்டால் தீவிரவாதத்தையும் ஒழித்து விடலாம் என்று கூறியிருந்தார் மிலிபான்ட்.
மேலும், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பானவர்களை பாகிஸ்தான் சட்டப்படியே, பாகிஸ்தானிலேயே விசாரிக்கலாம். பாகிஸ்தான் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியிருந்தார்.
மிலிபான்ட்டின் பயணத்தின்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிலிபான்ட்டின் பேச்சுக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மிலிபான்ட் பேச்சைக் கண்டித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், மிலிபான்ட்டின் பேச்சுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூதரக ரீதியில், இந்தியாவின் கருத்து, இங்கிலாந்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை அத்துடன் முடிந்து விட்டது.
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது அவரது கருத்தை வெளியிட்டுச் சென்றார்.
அவரிடம் நான், இது உங்களது கருத்து. இதை நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று தெளிவாகவே கூறியிருந்தேன் என்றார் முகர்ஜி.