கே.ஏ.கே மகனுக்கு பதவி-ஜக்கையனுக்கு ஜெ. கல்தா!
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் ஜெயலலிதா அதிமுகவில் சில அதிரடி மாற்றங்களை செய்ய ஆரம்பித்துள்ளார். கட்சியில் நெடுங்காலமாக ஓரங்கட்டப்பட்டுள்ள பழைய அதிமுகவினருக்கு மீண்டும் பொறுப்புகள் கொடுத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் தனது பழைய விசுவாசிகள், அவர்களது வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்புகளை அளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் எம்ஜிஆர் காலத்து அதிமுக விஐபியான கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகன் முகிலுக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பதவியை அளித்துள்ளார்.
இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த ஆர். சிவபதியை நீக்கியுள்ளார்.
அதே போல அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.டி.கே. ஜக்கையன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பில் சட்டப் பேரவை அதிமுக துணைத் தலைவரான எம்எல்ஏ ஆர்.சின்னசாமி நியமித்துள்ளார்.
ஐஎன்டியூசியில் நீண்டகாலம் பணியாற்றியவரான சின்னசாமிக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் உண்டு.
அதே போல அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் முத்தரையர் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக வெங்கடாசலத்துக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.