திருமாவளவனுக்கு கருணாநிதி சூடான பதில்
சென்னை: ஏழை-எளிய மக்களுக்காக அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்க மனம் வராவிட்டாலும், சந்தேகங்களை எழுப்பாமல் இருப்பது நல்லது என்று திருமாவளவனுக்கு முதல்வர் கருணாநிதி சூடாக பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: தமிழக ஆளுநர் உரையில் இலங்கைப் போர் நிறுத்தம் பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே?
பதில்: ஆளுநர் உரையில் பக்கம்-3, பத்தி 5ல் பக்கத்து நாடான இலங்கையில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு பசி பட்டினியால் இலங்கை தமிழ்ப் பெருமக்கள் வாடுகிறார்கள். இந்தப் போர், பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை வலியிறுத்தி வரும் நமது இந்தியப் பேரரசு பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாழ்த்தாது மேற்கொண்டு நாளும் வதைபடும் இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசு கேட்டுக் கொள்கிறது' என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை ஆழ்ந்து படித்துப் பார்த்தால், போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநர் உரையிலே வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள தொல்.திருமாவளவன் இந்தத் திட்டத்தை பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் இது போன்ற திட்டங்களை தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி யார் குறைந்த அளவிற்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் இன்சூரன்சு ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி தான் காப்பீடு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குகின்ற அதிகாரம் பெற்ற அமைப்பு.
அந்த மத்திய அரசின் சட்டரீதியான அமைப்பிடமிருந்து உரிமம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்கள் தான் தமிழக அரசின் சார்பில் கோரப்படும் ஒப்பந்தப் புள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள். எனவே இதில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க இயலாது என்பது தான் விதிமுறை.
ஏழை-எளிய மக்களுக்காக அரசினால் கொண்டு வரப்படும் இது போன்ற நல்ல திட்டங்களை வரவேற்க மனம் வராவிட்டாலும், சந்தேகங்களை எழுப்பாமல் இருப்பது நல்லது.
கேள்வி: ஆளுநர் உரை, கலைஞர் கடிதம்' போல் இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவரும் என் உடன் பிறப்புகளில் ஒருவராக இருந்து பாராட்டியிருப்பதற்கு மகிழ்ச்சி.
கேள்வி: ஆளுநர் உரையில் குறைகள் அதிகமாகவும், நிறைகள் குறைவாகவும் உள்ளது என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே?
பதில்:அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அதை நினைத்துக் கொண்டு, அளவுக்கு மிஞ்சி நிறைகள் இருப்பதாகச் சொல்லக் கூடாது' என நினைத்திருப்பார். குழம்பில் கூட உப்பு ஓர் அளவாக இருந்தால் தானே சுவைக்கும்! எனவே குறைவாகவாவது நிறைகள் இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டதற்காக நன்றி.
கேள்வி: ஆளுநர் அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, அதனை செல்லரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு என்றெல்லாம் வர்ணித்திருக்கிறாரே?
பதில்: அதிலே கூட நோட்டு', காசு' என்று தான் அவருக்கு நினைப்பு போகிறது. அவரது தரம் தாழ்ந்த வர்ணனையை சில ஏடுகள் வெளியிடாமலே மறைத்து விட்டதை கவனித்திருப்பீர்களே!.
கேள்வி: மது விலக்கு பிரச்சனையில் அரசு இன்னும் முதல் படியிலேயே இருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பதில்: படிகளில் ஏறும் போது ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.