அரசின் 'கோயபெல்ஸ்' பொய்கள்-வைகோ தாக்கு
சென்னை: கவர்னர் உரையில் கோயபெல்ஸ் பாணியில் தமிழக அரசு பொய்களை அள்ளி வீசி உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கவர்னர் உரையின் தொடக்கத்தில், இந்திய நாட்டின் ஜனநாயகத்துக்கு திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டதாகவும், ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்கப்பட்டதாகவும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே நடக்காத அராஜகத்தின் மூலம் 100 கோடி ரூபாயை வீதி வீதியாக, வீடு வீடாக அள்ளி வீசி பணம் வாங்க மறுத்த வீடுகளிலும் பணத்தை திணித்து, வாக்காளர்களை மிரட்டி பயமுறுத்தி, வாக்குப்பதிவு முடியும் வரை அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, மாலை 4 மணி வரையிலும் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடைசி ஒரு மணி நேரத்தில் 90 சதவீத வாக்குகள் பதிவானதாக ஆக்கப்பட்ட முறைகேட்டின் மூலம் ஆளும் கட்சி இத்தேர்தலில் பெற்ற வெற்றி ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய களங்கத்தையும் இழுக்கையும் தந்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முழுக்க முழுக்க ராணுவ உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்கின்ற வகையில் கவர்னர் உரையில் கோயபெல்ஸ் பாணியில் பொய்களை அள்ளி வீசி உள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் நடக்கும் போர், பிரச்சினையை தீர்க்க உதவாது என்பதை இந்திய அரசு வலியுறுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட பெரிய பொய்யை கோயபெல்ஸ் கூட சொல்ல முடியாது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இதுவரையிலும் இந்திய அரசு இலங்கைக்கு சொல்லவே இல்லை.
மொத்தத்தில் இந்த கவர்னர் உரை பொய்கள் நிறைந்த ஒரு மோசடி அறிக்கை என்று கூறியுள்ளார்.
ஏமாற்றம் அளிக்கிறது-திருமாவளவன்:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வரின் காப்பீட்டுத் திட்டம்'' வரவேற்கத்தக்க ஒன்று. இத்திட்டத்தின்கீழ் குடும்பம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவம் பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய், இதயநோய், சிறுநீரக கோளாறு, மூளை மற்றும் முதுகுத் தண்டு பாதிப்பு, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கான மருத்துவம் போன்றவை இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்வதற்கு ரூ. 1 லட்சம் என்பது மிகவும் குறைவான தொகையாகும். எனவே, குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தை பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த கூடாது.
ஈழத்தமிழர் சிக்கல் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கூறப்படவில்லை. சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கூட போர் நிறுத்தம் குறித்து வெளிப்படையாக பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications