சொந்த ஊருக்குத் திரும்பினார் புஷ் - உற்சாக வரவேற்பு
டெக்ஸாஸ்: பிசியான பணியிலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார் ஜார்ஜ் புஷ். சொந்த வீட்டுக்குத் திரும்பியிருப்பது நன்றாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஜார்ஜ் புஷ் சொந்த மாகாணமான டெக்ஸாஸுக்குத் திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டுக்கு புஷ் திரும்பியபோது, மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் புஷ்ஷை வரவேற்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் வாசம் புரிந்து வந்த புஷ், சொந்த வீட்டுக்கு திரும்பியது சந்தோஷம் தருவதாக கூறியுள்ளார்.
தன்னை வரவேற்ற கூட்டத்தினர் மத்தியில் புஷ் பேசுகையில், சொந்த வீட்டுக்குத் திரும்ப நேரம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
நிமிர்ந்த நடையுடன் எனது வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். பெருமையுடன் திரும்பி வந்துள்ளேன். என்ன சிந்திப்பது என்று நான் ஒருபோதும் கருத்துக் கணிப்பு நடத்தியதில்லை. சிறந்ததை செய்தேன். அதற்கான பாராட்டுக்கள் கிடைத்ததாக உணர்கிறேன்.
இனி செய்தித் தாள் படிப்பது, வாக்கிங், விருப்பமான காபியை ஓய்வாக அருந்துவது என பொழுது கழியப் போகிறது. அந்த நினைவு சந்தோஷம் தருகிறது.
அதிபர் பாரக் ஒபாமா நல்ல மனிதர். அவருக்கு நான் வாழ்த்துக் கூறினேன் என்றார் புஷ்.
புஷ் பிறந்த ஊர் கனக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் நகராகும். ஆனால் அவரது குழந்தைப் பருவம் முழுவதும் மிட்லேன்ட்டில்தான் கழிந்தது.
70களில் தனது மனைவி லாராவையும் இங்குதான் அவர் சந்தித்து காதல் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.