70 நாட்டு முஸ்லீம் தலைவர்கள் ஒபாமாவுக்கு கடிதம்
வாஷிங்டன்: 70 நாடுகளைச் சேர்ந்த 300 இளம் முஸ்லீம் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், உலகில் நிலவும் பதட்டத்தைத் தணித்து, முஸ்லீம்கள் அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனர்.
கடிதம் அனுப்பியவர்களில் 9 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் தலைநகர் டோஹாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாளைய முஸ்லீம் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதம் குறித்து அந்த முஸ்லீம் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லீம் உலகம் குறித்த அமெரிக்காவின் பார்வையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர ஒபாமா முயல வேண்டும்.
பரஸ்பரம் நலன் மற்றும் பரஸ்பரம் மரியாதைக்கு அமெரிக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
முஸ்லீம் உலகம் அமைதியுடன் வாழவும், உலக அளவில் நிலவி வரும் பதட்டங்களைக் குறைக்கவும் ஒபாமாவால் முடியும்.
இளைஞர்கள், சிறுபான்மையினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒபாமாவும், பிற உலகத் தலைவர்களும் பாடுபட வேண்டும்.
சர்வதேச அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க சுமூகப் பேச்சுவார்த்தைகளையும், தூதரக ரீதியிலான முயற்சிகளையும் ஒபாமாவும் பிற உலகத் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
உலகின் இன்றைய தலைவர்களான நீங்கள், எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவீர்களேயானால், நாளைய தலைவர்களாகிய நாங்கள், எங்களது உலகத்தை சிறப்பான எதிர்காலத்துடன் கூடியதாக மாற்றி அமைப்போம். அனைவரும் அமைதியுடன் வசிக்கக் கூடிய அருமையான உலகமாக அது இருக்கும்.
இந்த சீரிய நோக்கம் நிறைவேற உங்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். மாற்றத்திற்கான நேரம் தற்போது வந்து விட்டது என்று அதில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications