எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் அனுமதி - நாளை பைபாஸ் ஆபரேஷன்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்களுக்கு முன்பு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியாகிராபி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளி வந்துள்ளன.
அதில், பிரதமரின் இதயக் குழாய்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அடைப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நாளை பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் வசம் பிரதமரின் பொறுப்புகள்
பிரதமர் அறுவைச் சிகிச்சை முடிந்து குறைந்தது 3 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். எனவே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை அவரது பொறுப்புகள் மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரதமரின் டாக்டர் கே.எஸ்.ரெட்டி கூறுகையில், பிரதமர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டார். அவர் ஆரோக்கியமாக உள்ளார். தனது பணிகளையும் கவனிக்கத் தொடங்கி விட்டார்.
அவரது உடல் நிலை இயல்பாக உள்ளது. தற்போது தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்தபடி பணிகளைத் தொடர்கிறார் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications