கலர் டிவி பேர ஊழல் வழக்கிலிருந்து செல்வகணபதி விடுதலை
சென்னை: இலவச கலர் டிவி விநியோகத்தில், ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக பிரமுகரமான செல்வகணபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டது. டி.வி. வாங்க எல்காட் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது.
இதில் ரூ.82 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, எல்காட் நிறுவன கிளை மேலாளர் பொம்மையநாயக்கன், ஹைதராபாத்தில் உள்ள முதுநிலை மேலாளர் புருஷோத்தமன் ஆகியோர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு தொடர்ந்தது.
சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கடந்த 2.2.2000-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை 2003-ம் ஆண்டு தொடங்கி கடந்த மாதம் வரை நடந்தது.
இந்த வழக்கில் இன்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். செல்வகணபதி உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார் செல்வகணபதி என்பது நினைவிருக்கலாம்.