கன்னியாகுமரியில் எலிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவி வரும் எலிக் காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு பலர் பாதிக்கப்பட்டனர். உயி்ர் இழப்பும் ஏற்பட்டது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. நாகர்கோவிலில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவன் ஒருவன் காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சுகாதார துறையினர் டெங்கு அறிகுறி இல்லை என கூறி விடுகின்றனர்.
இருப்பினும் மாவட்டம் முழுவதும் கொசுத்தொல்லை பெருகியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தை ஓட்டிய கேரள மாநில பகுதிகளான பறசாலை, பொழியூர், உள்ளிட்ட இடங்களில் எலிகாய்ச்சல் பரவி வருகிறது.
பாறசாலை குளத்தூர் உச்சகட்டையை சேர்ந்த பானு, கோயில்விளை பொன்னுமுத்தன் ஆகிய 2 பேர் பலியாகியுள்ளனர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மேலும் குமரி-கேரள எல்லையை ஓட்டி 46 பேர் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குமரி மாவட்ட மக்களையும் பீதி அடைய செய்துள்ளது.
திடீர் வாந்தி பேதி - தொழிலாளி பலி
தூத்துக்குடி பகுதியிலுள்ள முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, கோவங்காடு, பழைய கயல், தெர்மல் நகர், மீனவர் காலனி, ராஜபாண்டி நகர், ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்..
அவர்களுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா, உறைவிட மருத்துவ அதிகாரி விஸ்வநாதன், உதவி அதிகாரி சைலஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏரல் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குணசெல்வம் என்பவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் 14 பெண்கள் உள்பட 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications