அமெரிக்காவில் ஆந்திர சாப்ட்வேர் என்ஜீனியர் மர்ம மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் இன்டியானா போலிஸ் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் மர்மான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்தியால புருஷோத்தம் (27). சாப்ட்வேர் என்ஜீனியர். அமெரிக்காவின் இன்டியானா போலிஸ் நகரில் உள்ள டிரைடன் இன்போடெக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரவீனா. இவரும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார்.
புருஷோத்தமின் தந்தை நாகலிங்கம் சப் இன்ஸ்பெக்டர் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றார் புருஷோத்தம்.
இந்த நிலையில் தனது குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் புருஷோத்தம்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், செவ்வாய்க்கிழமை காலை ஆறேகால் மணிக்கு தனது கணவர் பிணமாக கிடப்பதைப் பார்த்துள்ளார் புருஷோத்தமின் மனைவி.
உடனே அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்றனர். புருஷோத்தமின் கழுத்தில் சில அடையாளங்கள் காணப்பட்டன. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
தொடக்க விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. என்ன காரணத்திற்காக புருஷோத்தம் இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
சமீப காலமாக அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையி்ல் ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.