பாக். அதிபர் சர்தாரியுடன் போனில் பேசினார் ஹில்லாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹில்லாரி கிளிண்டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹில்லாரி கிளிண்டன் பதவியேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
அப்போது அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் நோக்கம், செயல்பாடுகள், பாகிஸ்தான் குறித்த கொள்கை ஆகியவற்றை சர்தாரியிடம் அவர் விளக்கினார்.
மேலும் பாகிஸ்தான், அமெரிக்க உறவு, பிராந்திய நிலைமை குறித்தும் அவர் சர்தாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்துக் கொண்டனராம்.
இந்த பேச்சின்போது ஹில்லாரி கிளிண்டனுக்கு சர்தாரி வாழ்த்து தெரிவித்தார். மேலும்,முஸ்லீம் உலகத்துடனான அமெரிக்காவின் தொடர்புகளை வலுப்படுத்த விரும்பும் அதிபர் ஒபாமாவின் கருத்தையும் வரவேற்பதாக சர்தாரி தெரிவித்தாராம்.