ராஜஸ்தானில் 5 நிமிடத்துக்கு 1 குழந்தை பலியாகும் அவலம்
குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெப் 2009ல் உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதி்ல் ஒன்றை ராஜஸ்தான் மாநில சுகாதரத் துறை அமைச்சர் அய்முதீன் அகமதுக்கும் அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், ராஜஸ்தானில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 17 ஆயிரம் குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாள் வருவதற்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர். அதாவது சராசரியாக 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை மரணமடைகிறது. பிரசவம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் ஒரு தாய் (ஆண்டுக்கு 8 ஆயிரம்)பலியாகிறார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் நான்கிலும் சேர்த்து பிரசவம் தொடர்பாக மரணமடைபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் மட்டும் இது 9.2 சதவீதமாக உள்ளது.
ராஜஸ்தானில் ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 76 சதவீதமும், பிறந்த ஒரு வாரத்துக்குள் மட்டுமே ஆகும் குழந்தைகளில் 40 சதவீதமும் மரணமடைகின்றனர். இது கொடுமையான விஷயமாகும் என்கிறது யுனிசெப்.
இது குறித்து ராஜஸ்தான் மாநில யுனிசெப் தலைவர் சாமுவேல் மவுன்கனிட்ஸ் கூறுகையில், ராஜஸ்தானில் பிரசவத்துக்கு தேவையான நவீன உபகரணங்கள் அதிகம் இல்லை. பிரசவத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு இல்லை என்றார்.