மாமூல் வாங்கிய டாஸ்மாக் மேலாளர்: போலீஸ் விசாரணை !
கரூர்: கரூரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் டாஸ்மாக் மேலாளர் மாமூல் விவகாரம் குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 112 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 175 மேற்பார்வையாளர்கள், 275 விற்பனையாளர்கள் பணி புரிகின்றனர்.
இந்த நிலையில் அதிக வருமானம் வரும் கடைகளுக்கு ஊழியர்களை இட மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக திருச்சி டாஸ்மாக் மேலாளர் சடகோபன் மீது புகார் எழுந்தது.
மேலும் ஒவ்வொரு கடைக்கும் மாதாமாதம் மாமூல் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் புகார் அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் திடீர் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்த விவகாரம் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாமூல் பெற்ற டாஸ்மாக் அதிகாரிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.