டெல்லி அருகே 2 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இந்த இருவரும் காஸியாபாத்திலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்தபோது வேட்டையாடப்பட்டுள்ளனர்.
நொய்டா பகுதியின் 97வது செக்டரில் இந்த என்கவுன்டர் அதிகாலை இரண்டே கால் மணியளவில் நடந்துள்ளது.
உ.பி. போலீஸாரும், தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து இந்த என்கவுன்டரை நடத்தினர்.
இந்த மோதலில் ஒரு கான்ஸ்டபிள் காயமடைந்தார்.
இதுகுறித்து உ.பி. கூடுதல் டிஜிபி பிரிஜ் லால் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதங்களாகவே தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரவாத கும்பல் குறித்த தகவலை கண்காணித்து வந்தனர். நேற்று, 2 தீவிரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கியுடன் காஸியாபாத்தின் லால் குவான் பகுதியிலிருந்து கிளம்பி டெல்லி செல்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை குறிப்பிட்ட பகுதியில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாருதி 800 காரில் தீவிரவாதிகள் வந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட சண்டையில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
காரில் இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள், ஒரு பை ஆகியவை இருந்தன.
மேலும், நான்கு மேகஸின்கள், 120 குண்டுகள், டெட்டனேட்டர்கள், 9 ஆர்.டி.எக்ஸ். குண்டுகள், பாகிஸ்தான் பாஸ்போர்ட்கள், சில ஆவணங்கள், ரூ. 18 ஆயிரம் பணம் ஆகியவையும் சிக்கியுள்ளன.
இருவரும் பாகிஸ்தானியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இறந்த இருவரில் ஒருவன் உயிரிழப்பற்கு முன்பு, தங்களது அடையாளத்தைத் தெரிவித்து விட்டு இறந்தான்.
இருவரும் முதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டனர்.
அவர்களில் ஒருவனது பெயர் பரூக். பாகிஸ்தானின் அகாரா பகுதியைச் சேர்ந்தவன். இன்னொருவனது பெயர் அபு இஸ்மாயில். இவன் பாகிஸ்தானின் ராவல்கோட் பகுதியைச் சேர்ந்தவன் என்றார்.
குடியரசு தினத்திற்கு முதல் நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் டெல்லியில் நாளை நாச வேலையில் ஈடுபடுவதற்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.