என்னைப் போலவே சாதாரண மக்களுக்கும் தரமான சிகிச்சை: பிரதமர் விருப்பம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் வேகமாக தேறி வருகிறார். தனக்குக் கிடைத்தது போலவே சாதாரண மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மிக சிக்கலான இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரதமர் வைக்கப்பட்டுள்ளார்.
டாக்டர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக அவரது உடல் நிலை தேறி வருகிறது.
இதுகுறித்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமரின் மருத்துவரும், அறுவைச் சிகிச்சைக் குழுவில் இடம் பெற்றிருந்தவருமான டாக்டர் கே.எஸ்.ரெட்டி கூறுகையில், பிரதமரின் உடல் நிலையில் மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுகிறது. விரைவில் பணிக்குத் திரும்ப அவர் ஆர்வமாக உள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மிகவும் நல்ல உணர்வுடன் உள்ளார். சொல்வதை புரிந்து கொள்கிறார். வசதியாக உணர்கிறார்.
இன்னும் நான்கு வாரங்களில் பிரதமர் தனது வழக்கமான பணிகளைப் பார்க்கலாம். பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவரது உடல் நலம் தேறி விடும். அதற்கு முன்பாகவே அவர் பல்வேறு பணிகளைப் பார்க்க முடியும்.
தற்போது அவருக்கு தண்ணீர் மற்றும் பழச்சாறு ஆகியவை வழங்கப்படுகிறது. விரைவில் அவருக்கு திட உணவுப் பொருட்கள் வழங்க ஆரம்பிப்போம் என்றார்.
சாதாரண மக்களுக்கும் தரமான சிகிச்சை - பிரதமர் விருப்பம்
இதற்கிடையே, தனக்குக் கிடைத்ததைப் போன்ற தரமான, சிறந்த மருத்துவ வசதிகள், சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தனக்கு அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்களுக்கும், எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தனக்குக் கிடைத்ததைப் போன்ற தரமான, சிறப்பான மருத்துவ சேவை சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனால்தான் அறுவைச் சிகிச்சைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை நான் தேர்வு செய்ததேன். மேலும், மக்களுக்கு எய்ம்ஸ் மீது நம்பிக்கை வர வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது என்றும் பிரதமர் கூறினார்.
எனக்கு தரமான, சிறப்பான மருத்துவ சிகிச்சை கிடைத்தது என்பதை விட இதே அளவிலான சிகிச்சையும், வசதிகளும் சாதாரண மக்களுக்கும் கிடைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன்.
எனக்கு சிகிச்சை அளித்த உங்கள் அனைவருக்கும் (டாக்டர்கள்), பராமரித்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் பணிக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளேன் என்று பிரதமர் கூறியதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications