நடனமாடிய பெண்களுக்கு அடி, உதை: இந்து அமைப்பு வெறிச் செயல்
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில், ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பு நேற்று நடத்திய வெறித் தாக்குதலில் பெண்கள் காயமடைந்தனர். ஹோட்டலில் நடனம் ஆடிய பெண்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.
மங்களூர் பல்மட்டா சாலையில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் இளம் பெண்கள் கவர்ச்சி நடனம் ஆடுவது வழக்கம். அரை குறை ஆடைகளுடன், போதையில் நடனம் ஆடும் இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்த ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பினர் நேற்று அங்கு விரைந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்தக் கும்பல், ஹோட்டலுக்குள் கோஷமிட்டபடி புகுந்தனர். அங்கு நடனமாட வந்த பெண்கள், நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் என சகலரையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதைப் பார்த்து அலறி அடித்தபடி பெண்கள் ஓட ஆரம்பித்தனர். ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி அடித்ததில் சில பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
2 பெண்கள் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். அவர்களுடன் ஆடுவதற்காக வந்திருந்த வாலிபர்களையும் இந்து அமைப்பு கும்பல் தாக்கியது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹோட்டல் உரி்மையாளர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த போலீஸார், விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதல் நடத்திய 10 பேரை கைது செய்தனர். அவர்கள் உடனடியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீராம் சேனாவின் இந்த வெறித் தாக்குதலை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. இவர்களை அரசு சும்மா விடாது, அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள் அமைப்புகளும் இந்த வெறிச் செயலைக் கண்டித்துள்ளன.
பெண்கள் என்றும் பாராமல் இப்படி வெறித்தனமாக நடந்து கொண்ட கும்பல் குறித்து தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications