செங்கோட்டை அருகே 101 கிலோ வெடிபொருள் சிக்கியது
செங்கோட்டை: செங்கோட்டை அருகே 101 கிலோ வெடிபொருட்கள் சிக்கியுள்ளன. நாசவேலைக்காக இது கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் கிழ புதூர் மெயின் ரோட்டில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகமடைந்த போலீஸார் அந்தக் காரை நிறுத்த சைகை காட்டினர்.
ஆனால் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார். இதையடுத்து காரை கைப்பற்றிய போலீஸார் உள்ளே சோதனை போட்டனர்.
அப்போது அதில் 6 பைகள் இருந்தன. அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே, பொட்டாசியம் குளோரைடு மற்றும் சல்பேட் ஆகிய வெடிமருந்துகள் இருந்தன.
இதுதவிர ஒயரும் இருந்தது. இவற்றின் மொத்த எடை 101 கிலோ ஆகும்.
இவற்றை யார் கொண்டு வந்தது, எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. குடியரசு தினத்தன்று நாச வேலையில் ஈடுபடுவதற்காக இவற்றைக் கடத்தினரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரை ஓட்டி வந்த நபர் கேசவபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நடராஜன் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் கிடைத்தால்தான் இந்த வெடிபொருட்களுக்கான பின்னணி தெரிய வரும்.












Click it and Unblock the Notifications