இலங்கை ராணுவத் தாக்குதலில் 300 அப்பாவித் தமிழர்கள் பலி - ஐ.நா. கண்டனம்
வன்னி: இலங்கை ராணுவம், பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் மீது கொலை வெறித்தனமாக நடத்திய பீரங்கித் தாக்குதலில் 300 தமிழர்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபை கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது.முல்லைத்தீவைப் பிடிக்க கடும் சண்டை புரிந்து வருகிறது ராணுவம். முல்லைத்தீவு நகரைப் பிடித்துள்ளதாக அது அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தாங்கள் மீட்ட பகுதிகளைப் பாதுகாப்பான வளையமாக அறிவித்து அந்தப் பகுதிக்கு வருமாறு தமிழர்களை அது வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் வரும் அப்பாவித் தமிழர்களையும் அது கண்மூடித்தனமாக தாக்கி அழித்து வருகிறது.
95 சதவீத சண்டை முடிந்து விட்டது. மிச்சம் மீதி உள்ள புலிகளையும் அழித்து விடுவோம். அதற்கான இறுதிப் போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்று கூறியுள்ள ராணுவம் அப்பாவிகளை குறி வைத்து அழிப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் சந்தி, விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் நேற்று பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் அனைத்தும் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து நடந்துள்ளது. இதில் 300 தமிழர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளில் நேற்று காலை 9.45 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2 மணியளவில், ஐ.நா. தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மேற்பார்வையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை குறி வைத்து பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.
உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் எனக் கூறப்படுகிறது.
ஐ.நா. கவலை
வன்னித் தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பதை இலங்கைக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் நீல் புனே உறுதிப்படுத்தியுள்ளார். கவலையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வன்னி பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள பெருமளவிலான பொதுமக்கள் உணவு பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அங்கு தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.