அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியரசு தின கொண்டாட்டம்
வாஷிங்டன்: அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரொனன் சென் இதில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
ரொனன் சென்னின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளான இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் செய்தியை வாசித்தார் சென்.
பின்னர் பல்வேறு இந்திய மொழிகளில் தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டன.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், இந்திய மக்களுக்கு அமெரிக்காவை விட சிறந்த நண்பர் இல்லை என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் சிறந்த நண்பனாக திகழம் முழு தகுதியும் அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு என்று அதில் பாரக் ஒபாமா கூறியிருந்தார்.
பிரதமர் குணமடைய வாழ்த்து
மேலும், பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டியும் ஒபாமா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அமீரகத்தில் ..
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் குடியரசு நாள் உரையினை வாசித்தார்.
இந்திய மக்களுக்கு இந்த நாள் ஒரு முக்கியமான நாளாகும் என்றார். நமது நாட்டுடன் அமீரகத்தின் உறவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு முக்கியப் பங்கு வகித்து வருவது பெருமை கொள்ள வைப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய குடியரசுத் தலைவரின் உரையை வாசித்த அதில் குறிப்பிடப்பட்ட இந்தியாவின் வளர்ச்சி, தீவிரவாத தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
துபாயில் ...
துபாயில் இந்தியாவின் 60 ஆவது குடியரசு தின விழா இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான இந்தியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
துபாயில் கடுமையான போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்த போதுமான இடவசதியின்மை, பாதுகாப்பு சோதனை ஆகியன இருந்தும் இந்தியர்கள் தேசியக் கொடியுடன் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி தேசியக் கொடி ஏற்றிவைத்து, இந்தியக் குடியரசுத் தலைவரின் உரையினை வாசித்தார். பள்ளி மாணவர்கள் அதனைத் தொடர்ந்து தேசபக்திப் பாடல்களை பாடினர்.
ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய சங்கங்களிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மேலும் அமீரகமெங்கும் உள்ள இந்தியப் பள்ளிகள் குடியரசு தின விழா வெகு விமரிசையாக தேசியக் கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது.