கருணாநிதி, ஜெ. இலங்கை வர வேண்டும்: பிரணாபிடம் ராஜபக்சே கோரிக்கை!

வன்னிப் பகுதியில், போரற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் கிட்டத்தட்ட 800 பேரை இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல் மூலம் படுகொலை செய்துள்ளன.
இதுகுறித்த தகவல்கள் வெளியே வராமல் இலங்கை அரசு படு கவனமாக அதை மறைத்துள்ளது. கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்து ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவ வீரர்களைக் கொன்றதற்குப் பழி தீர்க்கும் வகையில் இந்த அநியாய இனப்படுகொலையை இலங்கை ராணுவம் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் நேற்று மாலை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
கொழும்பு சென்று சேர்ந்தவுடன், ராஜபக்சேவை பிரணாப் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், பாதுகாப்பான பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்தாது, உயிரிழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரணாப்பிடம் ராஜபக்சே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், தமிழக முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அடங்கிய தமிழக குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். வன்னிப் பகுதிக்கு சென்று அவர்கள் நிலைமையை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியிடம் ராஜபக்சே கேட்டுக் கொண்டாராம்.












Click it and Unblock the Notifications