மத்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துகிறது: திருமாவளவன்
செங்கல்பட்டு: இலங்கைக்கு பீரங்கிகளைக் கொடுத்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் மத்திய அரசு கொச்சைப்படுத்தியுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை நேற்று திருமாவளவன் சந்தித்தார். அவர்களிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறாத வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம் என மாணவர்கள் கூறி விட்டனர்.
பின்னர் உண்ணாவிரத மேடைக்கு அருகில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஈரோடு, திருவனந்தபுரம் வழியாக சிங்கள ராணுவத்துக்கு, இந்திய அரசு பீரங்கிகளை அனுப்பியதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த இன படுகொலையை கண்டு, உலகெங்கும் உள்ள பத்தரை கோடி தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்திய அரசு, தமிழர்களின் உணர்வை மதிக்கவில்லை; கொச்சைப்படுத்துகிறது.
தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக இந்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 29-ந் தேதி சென்னையில் நடக்கிறது. அப்போது அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு எடுக்கப்படும்.
பிரணாப் முகர்ஜி இப்போது கொழும்பு சென்றுள்ளார். அவர் ஏன் போகிறார் என்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை. போரை நிறுத்துங்கள் என்று கூறத்தான் பிரணாப் முகர்ஜி போகிறார் என்று மத்திய அரசும் சொல்லவில்லை, பிரணாப் முகர்ஜியும் கூறவில்லை.
எனவே மேனனைப் போல, இந்திய - இலங்கை உறவு நன்றாக உள்ளது என்று பிரணாப் முகர்ஜியும் கூறத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறாரோ என்று கருத வேண்டியுள்ளது என்றார் திருமாவளவன்.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் கெம்புகுமார், ஆறுமுகநயினார், துரியன், திருமுருகன் ஆகியோரையும் திருமாவளவன் நேரில் பார்த்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்தார்.